ஞாயிறு, 30 ஜூன், 2013

இல்லாதாருக்கு பொருளைக் கொடுப்பதே ஈகை


அறத்துப்பால், இல்லறவியல், அதிகாரம்: ஈகைகுறள் 221-225



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.     குறள் # 221
இல்லாதாருக்கு பொருளைக் கொடுப்பதே ஈகை, மற்றவை
ஆதாயத்தை எதிர்பார்த்து தருவதாகும்.       பாமரன் பொருள்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.       குறள் # 222.
நல்வழிதான் என்றாலும் பெறுவது தீமையானதே, மேலுலகம்
கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.    பாமரன் பொருள்

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.   குறள் # 223
இல்லையெனும் துன்பச் சொல் கூறாதிருப்பதும், கொடுப்பதும்
நற்குடும்பத்தில் பிறந்தவனிடமே உண்டு.     பாமரன் பொருள்.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.   குறள் # 224.
இனிதில்லை இரக்கப் படுவது யாசிப்பவரின்
மலர்ந்தமுகம் காணும் வரை.       பாமரன் பொருள்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.       குறள் # 225.
தவவலிமை உடையவரின் வலிமையாம் பசிபொறுப்பது, அப்பசியை
போக்குபவரின் வலிமைக்கு குறைந்ததே.    பாமரன் பொருள்.
 

வெள்ளி, 28 ஜூன், 2013

உதவுதற்குத் தயங்கார் கடமை அறிந்த அறிவாளிகள்.

அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல்.




கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.          குறள் @ 211
கைம்மாறு வேண்டாதவை உதவிகள், உதவும் மழைக்கு
என்னசெய்து விடமுடியும் உலகத்தார்.    பாமரன் பொருள்


தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.         குறள் # 212
முயன்று சம்பாதித்த பொருளெல்லாம் தேவைப்படுவோருக்கு
உதவி செய்வதற்கே ஆகும்.           பாமரன் பொருள்

புத்தே ளுலக்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புறவின் நல்ல பிற.                  குறள் # 213.
தேவருலகத்திலும் இவ்வுலத்திலும் பெறுவது கடினம்
ஒப்புறவைப் போல மற்ற நல்லவை.    பாமரன் பொருள்.

ஒத்தது அறிவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.       குறள் # 214.
ஒப்புறவறிந்து பிறருக்கு உதவுபவர் உயிர்வாழ்பவர், மற்றவரோ
இறந்தவராக எண்ணப் படுவார்.   பாமரன் பொருள்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.            குறள் # 215.
பயனுள்ள குளம் நீரால் நிறைந்தது போன்றது, உலகிற்குதவும்
பெரிய அறிவுடையவனின் செல்வம்.     பாமரன் பொருள்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.        குறள் # 216
பயன்தரும் மரம் ஊரின்நடுவே பழுத்தாற் போன்றது, செல்வம்
மக்களால் விரும்பப் படுபவனிடம் சேர்ந்தால்.     பாமரன் பொருள்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்    குறள் # 217.
எல்லா உறுப்புகளும் மருந்தாகும் மரம்போன்றது, செல்வம்
உதவிடும் பெரும்பண்பாளனிடம் சேர்ந்தால்.        பாமரன் பொருள்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.           குறள் # 218
செல்வம்குறைந்த காலத்திலும் உதவுதற்குத் தயங்கார்
கடமை அறிந்த அறிவாளிகள்.     பாமரன் பொருள்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.      குறள் # 219.
உதவும்நற்பண்பாளன் வறியவன் ஆவது செயத்தக்க உதவிகளை
செய்யாமல் வருந்துகிற தன்மையாகும்.      பாமரன் பொருள்

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.       குறள் # 220.
பிறருக்கு உதவுவதால் கேடுவரும் என்றால் அக்கேட்டை
தன்னை விற்றாவது வாங்கத்தக்கதே.     பாமரன் பொருள்